சலசலவென்று மெதுவாக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை. ஓடையின் உள்ளே, அசைந்தாடிக்கொண்டிருக்கும் நீர்ச்செடிகள். நீரோடும் ஒலியைத் தவிர்த்து, வேறு ஏதும் இல்லாத, அமைதியான காட்சியாக திரையில் விரிகிறது
நந்தலாலா. "இசை - இளையராஜா" என்று ஆரம்பிக்கும் இந்த காட்சிக்கும், நந்தலாலா படத்திற்கும் ஏக பொருத்தம். அமைதியான நீரோடைக்கு, அதன் ஓட்டம் இசையாவதைப் போல், மெதுவாக கடந்து செல்லும் திரைக்கதைக்கு, இசையாகி இருக்கிறார் இளையராஜா - படத்தின் முதற் கதாநாயகர்.
வயதால் சிறுவனான அகி (அஸ்வத்), மனதால் குழந்தையான பாஸ்கரனும் (மிஷ்கின்) தங்களது அம்மாக்களைத் தேடிச் செல்லும் பயணம்தான் நந்தலாலா. அகிக்கு அவனது அம்மா கன்னத்தில் ஒரே ஒரு முத்தமிட வேண்டும். பாஸ்கரனுக்கு அவனது அம்மா கன்னத்தில் ஒரு அறை விட வேண்டும். சுற்றுலா போவதாகப் பொய் சொல்லி வீட்டில் இருந்து கிளம்பும் அகி, மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்து வரும் பாஸ்கரன் என தாயைத் தேடி தனித்தனியே கிளம்பும் இந்த இருவரையும் இணைக்கிறது பயணம். இவர்களின் பயணத்தில் எதிர்கொள்ளும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான் நந்தலாலா.
திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் பல இடங்களில் வசனமே இல்லை (அல்லது குறைவு). இருந்தாலும், சொல்ல வந்ததை தெளிவாக உணர்த்தி இருக்கிறார். உதாரணமாக மிஷ்கினும், அஸ்வத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று பேசும் காட்சி. மிஷ்கின் தனது தாயின் கன்னத்தில் அறைய தேடிப் போவதாகச் சொல்ல, அதற்கு அஸ்வத் தான் தன் தாயின் கன்னத்தில் முத்தமிட அவளைத் தேடிப் போவதாகச் சொல்ல, இருவருக்கும் இடையில் நீண்டு கிடக்கிறது நெடுஞ்சாலையின் வெள்ளைக் கோடு. இதைப் போல படம் முழுக்க பல காட்சிகள். அனைத்தையும் இங்கே சொல்வதானால், படத்தின் திரைக்கதையைத்தான் முழுவதுமாக எழுத வேண்டி இருக்கும். :)
திரைமொழி குறைவு என்பதானால படம் முழுக்க இசைமொழி பேசி இருக்கிறார் இளையராஜா. அதிலும், இறுதிக்காட்சியில் மிஷ்கின் அவரது அம்மாவைப் பார்த்து அழும்பொழுது, "தாலாட்டு கேட்க" என்று உருகும் குரலாய் இளையாராஜா ஆரம்பிக்க, கேட்கும் யாருக்கும் ஒருதுளியாவது கண்ணில் நீர் துளிர்க்கும். பின்னணி இசை நம்மையும் பயணத்தில் கூட அழைத்து செல்கிறது.
சில காட்சிகளில் "அஞ்சாதே" பாதிப்பு இருந்தாலும், ஒளிப்பதிவில் பல காட்சிகள் மனதை விட்டு இன்னும் அகல மறுக்கிறது. இதைப் போல, படம் நெடுகிலும் வரும் சின்ன கதாபாத்திரங்களும் திரைக்கதையை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர். சிறுவன் அஸ்வத் பள்ளி ஆங்கிலத்தில் பிளந்து கட்ட, முரட்டு மீசை காவல் அதிகாரி ஒன்றும் புரியாமல், அஸ்வத்தை உற்று பார்க்க அரங்கில் சிரிப்பலைகள். இறுக்கமான திரைக்கதையை இலகுவாக்குவது இதைப்போல ஆங்காங்கே பரவிக் கிடக்கும் (நகைச்)சுவையான காட்சிகள்.
வாசமான ரோஜாவாக நந்தலாலா இருந்தாலும், ஆங்காங்கே சில முட்களும் எட்டிப் பார்க்கின்றன. முள்ளில்லாத ரோஜா இங்கே ஏது? அதனால் மலரை மட்டும் ரசிப்போம்.
அமைதியான, உணர்வு சார்ந்த படங்களை நீங்கள் ரசிப்பீர்கள் என்றால், நந்தலாலாவும் உங்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.