Thursday, December 20, 2012

21/12/12

என்னுடன் நீயிருந்த 
வண்ணமிகு நம்முலகம் ,
அழிந்தொழிந்து போனபின்னே 
ஆயிற்று நாட்கள் பல.
நாளை உலகம் அழியுமென,
நடுநடுங்கும் இவர்களெல்லாம்,
காதலித்து பார்த்திருந்தால் 
கற்றிருப்பர் தைரியத்தை!

Tuesday, December 18, 2012

உன் நினைவாக..


உன் நினைவாக
என்னிடமிருப்பது
உன் நினைவுகள் மட்டுமே!

Saturday, February 18, 2012

காதலில் சொதப்புவது எப்படி?


அவள்: காதலில் சொதப்புவது எப்படி - படம் பார்த்தியாடா?
அவன்: இத படத்துல வேற போய் பார்க்கனுமா?
அவள்: $^%&%$#$#@#@#$@$#
----

இப்படித்தாங்க.. சாதாரணமா ஆரம்பிக்கிற ஒரு உரையாடல், ஒரு சாதிச்சண்டை அளவுக்கு டெவெலப் ஆகி, கடைசியில அவள் அவனைத் திட்ட, அவன் அவள்கிட்ட திட்டு வாங்க - இப்படி திட்ட திட்ட காதல் பண்றத, ரெண்டு மணி நேரம் ஜாலியா சொல்லி இருக்காங்க.

ஏற்கனவே வலை மக்களுக்கு குறும்படமா அறிமுகமான படம்தான். அதை அப்படியே மேக்சிமைஸ் செஞ்சி, பெரிய திரையில காட்டி இருக்காரு இயக்குனர். படத்தோட ஒளிப்பதிவு கோளாறா, இல்லை சாந்தி தியேட்டர் ப்ரொஜெக்டர் கோளாறானு தெரியல - தியேட்டர்லயே படம் திருட்டு விசிடி தரத்துலதான் இருந்தது. இருந்தும் படத்தோட நம்மள ஒட்ட வைக்கிறது என்னன்னு பார்த்தீங்கன்னா, பெவிகாலோ, சீட்ல ஒட்டியிருந்த பப்பிள்-கம்மோ இல்ல - காதல். அதவிட, காதலிக்க பசங்க செய்ற சொதப்பல்கள்.

அதுலயும், சித்தார்த்-அமலா பாலோட மெயின் காதல் கதைய விட, சித்தார்த் நண்பனா வர்ரவரோட சொதப்பல் செம கலக்கல். அதுதான் ஒரிஜினல் குறும்படத்தோட கதைன்னு நினைக்கிறேன் (நான் இன்னும் குறும்படத்த பார்க்கல!). "அவ உன்னத்தான்டா பார்க்குறா! லவ் பண்ணிடு மச்சி!" இப்படின்னு கூட இருந்தே ஏத்தி விடற நண்பர்களா நாம ஏணியா பார்ப்போம். ஆனா, அந்த ஏணி நம்மள எப்படி பார்க்கும்னா "மாப்ள! நீ கீழ இருந்துகிட்டு கீழ விழுந்த பெருசா அடி படாது. அதனால இந்த ஏணி வழியா மேல போய், அங்க இருந்து கீழ விழனும்! சரியா!?" -

கமிங் பேக் டூ மெயின் ஸ்டோரி - படத்துல ஹீரோ, ஹீரோயின தவிர்த்து நிறைய சுவாரசியமான கேரக்டர்களும் விஷயங்களும் இருக்குது. தமன்னா படத்தை Facebook ப்ரோபைல் போட்டோவா வச்சிருக்குற சித்தார்த் பாட்டி, அமலா பால் அப்பா- அம்மாவோட காதல் கதை (ஆமாங்க, படத்துல ஆடியன்ச தவிர மீதி எல்லாருமே காதல் பண்ணிட்டுதான் இருக்காங்க!), பாண்டிச்சேரி ட்ரிப் அப்புறம் முக்கியமா "இனிமே உண்மைதான் பேசுவேன்" அப்டின்னு காதலிகிட்ட சத்தியம் பண்ணிட்டு, இந்த டிரஸ் எப்படி இருக்குன்னு கேட்டவகிட்ட, "கேவலமா இருக்கு"ன்னு உண்மைய சொல்லி அடி வாங்குற காதலன் - இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

மொத்ததுல, ஒரு சுவாரசியமான படம்.

கடைசியா சொல்ற மெசேஜ் என்னன்னா - பசங்க எல்லாம் டிசி கரண்ட் மாதிரி - ஒரு நேரத்துல ஒரு விஷயத்த மட்டுமே யோசிச்சிட்டு அப்படியே நேரா போய்கிட்டே இருப்பாங்க. ஆனா, டிசி கரண்ட் வேலைக்காகாது. பொண்ணுங்க எல்லாம் ஏசி கரண்ட் மாதிரி. எப்பவுமே ஏசிக்கிட்டே இருக்குறதுனால இல்ல.. நிமிசத்துக்கு ஒண்ணா மாத்தி மாத்தி யோசிச்சு, அவங்களும் குழம்பி, பசங்களையும் குழப்புவாங்க. ஆனா, ஏசி கரன்ட்டுதான் வீட்டுக்குதவும். அதனாலதான் காலங்காலமா, வீட்டுல விளக்கேத்தனும்னா கல்யாணம் பண்ணிக்கோங்கறாங்க. இத புரிஞ்சிகிட்டாதன் லைப் safe. இல்லாட்டி off.
--
தினம் இரு திருக்குறள் - http://twikural.veerasundar.com/

Thursday, December 09, 2010

ஸ்மைலி

நீ முத்த ஸ்மைலி அனுப்பும்
ஒவ்வொரு முறையும்
வெட்கிச் சிவக்கிறது
என் கணினி.
வெறுமையாகக் கிடக்கிறது
என் கன்னம்.

Saturday, November 27, 2010

நந்தலாலா

சலசலவென்று மெதுவாக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை. ஓடையின் உள்ளே, அசைந்தாடிக்கொண்டிருக்கும் நீர்ச்செடிகள். நீரோடும் ஒலியைத் தவிர்த்து, வேறு ஏதும் இல்லாத, அமைதியான காட்சியாக திரையில் விரிகிறது நந்தலாலா. "இசை - இளையராஜா" என்று ஆரம்பிக்கும் இந்த காட்சிக்கும், நந்தலாலா படத்திற்கும் ஏக பொருத்தம். அமைதியான நீரோடைக்கு, அதன் ஓட்டம் இசையாவதைப் போல், மெதுவாக கடந்து செல்லும் திரைக்கதைக்கு, இசையாகி இருக்கிறார் இளையராஜா - படத்தின் முதற் கதாநாயகர்.

வயதால் சிறுவனான அகி (அஸ்வத்), மனதால் குழந்தையான பாஸ்கரனும் (மிஷ்கின்) தங்களது அம்மாக்களைத் தேடிச் செல்லும் பயணம்தான் நந்தலாலா. அகிக்கு அவனது அம்மா கன்னத்தில் ஒரே ஒரு முத்தமிட வேண்டும். பாஸ்கரனுக்கு அவனது அம்மா கன்னத்தில் ஒரு அறை விட வேண்டும். சுற்றுலா போவதாகப் பொய் சொல்லி வீட்டில் இருந்து கிளம்பும் அகி, மன நல காப்பகத்தில் இருந்து தப்பித்து வரும் பாஸ்கரன் என தாயைத் தேடி தனித்தனியே கிளம்பும் இந்த இருவரையும் இணைக்கிறது பயணம். இவர்களின் பயணத்தில் எதிர்கொள்ளும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான் நந்தலாலா.

திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் பல இடங்களில் வசனமே இல்லை (அல்லது குறைவு). இருந்தாலும், சொல்ல வந்ததை தெளிவாக உணர்த்தி இருக்கிறார். உதாரணமாக மிஷ்கினும், அஸ்வத்தும் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று பேசும் காட்சி. மிஷ்கின் தனது தாயின் கன்னத்தில் அறைய தேடிப் போவதாகச் சொல்ல, அதற்கு அஸ்வத் தான் தன் தாயின் கன்னத்தில் முத்தமிட அவளைத் தேடிப் போவதாகச் சொல்ல, இருவருக்கும் இடையில் நீண்டு கிடக்கிறது நெடுஞ்சாலையின் வெள்ளைக் கோடு. இதைப் போல படம் முழுக்க பல காட்சிகள். அனைத்தையும் இங்கே சொல்வதானால், படத்தின் திரைக்கதையைத்தான் முழுவதுமாக எழுத வேண்டி இருக்கும். :)

திரைமொழி குறைவு என்பதானால படம் முழுக்க இசைமொழி பேசி இருக்கிறார் இளையராஜா. அதிலும், இறுதிக்காட்சியில் மிஷ்கின் அவரது அம்மாவைப் பார்த்து அழும்பொழுது, "தாலாட்டு கேட்க" என்று உருகும் குரலாய் இளையாராஜா ஆரம்பிக்க, கேட்கும் யாருக்கும் ஒருதுளியாவது கண்ணில் நீர் துளிர்க்கும். பின்னணி இசை நம்மையும் பயணத்தில் கூட அழைத்து செல்கிறது.

சில காட்சிகளில் "அஞ்சாதே" பாதிப்பு இருந்தாலும், ஒளிப்பதிவில் பல காட்சிகள் மனதை விட்டு இன்னும் அகல மறுக்கிறது. இதைப் போல, படம் நெடுகிலும் வரும் சின்ன கதாபாத்திரங்களும் திரைக்கதையை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர். சிறுவன் அஸ்வத் பள்ளி ஆங்கிலத்தில் பிளந்து கட்ட, முரட்டு மீசை காவல் அதிகாரி ஒன்றும் புரியாமல், அஸ்வத்தை உற்று பார்க்க அரங்கில் சிரிப்பலைகள். இறுக்கமான திரைக்கதையை இலகுவாக்குவது இதைப்போல ஆங்காங்கே பரவிக் கிடக்கும் (நகைச்)சுவையான காட்சிகள்.

வாசமான ரோஜாவாக நந்தலாலா இருந்தாலும், ஆங்காங்கே சில முட்களும் எட்டிப் பார்க்கின்றன. முள்ளில்லாத ரோஜா இங்கே ஏது? அதனால் மலரை மட்டும் ரசிப்போம்.

அமைதியான, உணர்வு சார்ந்த படங்களை நீங்கள் ரசிப்பீர்கள் என்றால், நந்தலாலாவும் உங்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.