Thursday, November 05, 2009

இன்னமும் இருக்கிறது


முகவரிகள் ஏதும் இல்லை, என்
முக வரிகள் மாறவில்லை.

தோழர்கள் யாருமில்லை, என்
தோள்களும் துவளவில்லை.

பாதைகள் காணவில்லை, என்
பாதங்களும் ஓயவில்லை.

எதிர்காலம் எத்தனை நாள்,
எனக்கேதும் தெரியவில்லை.

ஆனாலும் என்முகத்தில், புன்
சிரிப்புக்கும் பஞ்சமில்லை.


Monday, November 02, 2009

ஆதவனில் கண்ட 'அறிவியல்' உண்மைகள்


1.சமையற்கட்டுல, சப்பாத்தி, உப்புமா மட்டுமில்ல.. டைமிருந்தா, டைம்பாமும் செய்யலாம். தேவையான பொருட்கள் : ஓடாத வாட்ச் - ஒன்னு; பச்சைக் கலர் போர்டு - ரெண்டு; கொஞ்சம் எல்.இ.டி. லைட் (கலரா வேணும்கிறவங்க, அவங்களுக்குப் பிடிச்ச கலர எடுத்துக்கலாம்); அப்புறம் வயர் தேவைக்கேற்றவாரு. செய்முறைய ஆதவனக் கேட்டுக்கங்கப்பா.
2.'பெட்ரோல்'னு தெளிவா எழுதியிருக்குற பிளாஸ்டிக் டிரம்ல துப்பாக்கியால சுட்டா அது வெடிக்காது. அதுக்கு பதிலா, ஓட்டை குடத்துல ஒழுகுற தண்ணி மாதிரி, பெட்ரோல் அமைதியா டிரம்ல இருந்து வடியும்.
3. அஞ்சு நிமிஷ கேப்புல, ஒரு கிஃப்ட் பாக்ஸ்க்குள்ள ஓபன் பண்ண உடனே வெடிக்கிற மாதிரி பாம் செட் பண்றத குடிசைத் தொழிலா பண்ண முடியும் (மெய்யாலுமே ஒரு குடிசைலதான் அப்படி செட் பண்றாங்க, படத்துல!).
4. வழக்கமா ராக்கெட் லாஞ்ச்சர்ல இருந்து ராக்கெட் பாம் அனுப்புனா, அது டார்கெட்-அ தாக்குன ஒடனே வெடிக்கணும். ஆனா, டார்கெட்ல போய் சொருகிக்கிட்டு, ஒரு நிமிஷம் கழிச்சு (ஹீரோ கண்ணு முழிக்கிற வரைக்கும் பொறுமையா இருந்து), அப்புறமா வெடிக்கிற மாதிரியான பாம் எல்லாம் அறிமுகப்படுத்தியிருக்காங்க.
5. வில்லனோட ஹெலிகாப்டர் வானத்துல பறந்துக்கிட்டிருந்தா, டோன்ட் ஒர்ரி.. ஒரு ஜம்ப் பண்ணா ஈஸியா எலிய என்ன, ஹெலியக் கூடப் பிடிக்கலாம். (என்னங்க, பஸ்ஸ மிஸ் பண்ணா ஓடிப் போய் ஏறுறதில்லயா, அது மாதிரிதான் இதுவும்....அப்படியெல்லாம் சிரிக்கப்படாது!)
6. நாலாவது பாயிண்ட்ல சொன்ன, ராக்கெட் பாம்-அ, அம்பாஸிடர் கார்ல இருந்து உருவி எடுத்திட்டு, அஞ்சாவது பாயிண்ட்ல சொன்ன டெக்னிக் படி ஹெலிகாப்டரத் தாவிப் புடிச்சு, கையில எடுத்துட்டு போன பாம்-அ ஹெலிகாப்டர்ல குத்தி வைக்க முடியும் (ஹோட்டல்ல, பில்லுக் கம்பில பில்ல குத்துர மாதிரி, இங்க பாம குத்தி, குத்தி விளையாடுறாங்க. அதுலயும், அந்த பாம அம்பாஸிடர்ல சொருகுறதுக்கு வில்லனுக்கு ஒரு ராக்கெட் லான்ச்சர் தேவைப்பட்டது. ஆனா, ஹீரோ அசால்ட்டா கையில எடுத்து சொருகுறாப்ல!)

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனா, இதுக்கு மேல எனக்கு டைப் பண்ண பொறுமை இல்லாததுனால, இதோட நிப்பாட்டிக்குறேன்.

Sunday, October 18, 2009

திரு திரு துறு துறு

வேட்டைக்காரர்கள் பலர் வில்லெடுத்து எய்து, தமிழ்த் திரைப்படங்களை குருவியாக வீழ்த்த நினைத்தாலும், பேரரசர்கள் பலர் வந்து அதனை ஊரூராக விரட்டினாலும், கந்தசாமிகள் பலர் வந்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினாலும், தமிழ் படங்கள் உயிர்ப்புடன் இருக்குமென எதிர்பார்க்கலாம் - காரணம் திரு திரு துறு துறு போன்ற திரைப்படங்கள்!

Sunday, September 20, 2009

மங்களூர் பயணத்தைப் பற்றி

கடந்த ஒரு மாத காலமாக, மலையாள தேசத்திலிருந்து கன்னட தேசத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகி இருந்தேன். பணி நிமித்தமான இடமாறுதல். இதற்கு முன், பெங்களூருவைத் தாண்டி, இந்தியாவின் மேற்பகுதிகளுக்கு சென்றிராததால், மங்களூர் பயணத்தினை ஆவலுடனே எதிர்பார்த்திருந்தேன்.

அரபிக்கடலின் ஓரமாக, கேரள-கன்னட எல்லையோரம் அமைந்திருக்கும் நகரம், மங்களூர். இன்ஃபோசிஸில் இருந்து மங்களூரிலும் ஒன்று அல்ல இரண்டு மென்பொருள் உருவாக்க மையங்கள் (Software Development Center) அமைத்துள்ளனர். அதில் ஒன்றுக்குத்தான் நான் பயணமாகியிருந்தேன். மலபார் எக்பிரஸில் ரயில் பயணம் - ஒரு புறம் அரபிக்கடல் ஆர்ப்பரிக்க, ம்றுபுறம் கேரளக் காடுகளும், தூரத்தே தொடர்ந்து வரும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் என இயற்கைக்கு நடுவே பயணமாகி, ஒரு மழை நேரத்துக் காலையில் மங்களூரில் இறங்கினேன் (இது நடந்தது ஒரு மாதத்திற்கு முன்பாக என்பதனையும் இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!).

நான் சென்றிருந்த நேரம் மங்களூரில் ஒரு மழைக்காலம். காலை, மதியம், இரவு என மழை ‘ஓவர்-டைம்' பார்த்துக் கொண்டிருந்தது. இதனாலயே, முதல் வார ஓய்வில், நேரம் கிடைத்தும், மங்களூருவைச் சுற்ற முடியவில்லை. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மழை பெய்தால், கையில் ஒரு காஃபி கோப்பையை வைத்துக் கொண்டு (உ.பா பிரியர்கள் வேறு எதாவது வைத்துக் கொண்டு!), ஜன்னல் கம்பியில் வழியே மழையை ரசிக்கலாம். போனால் போகிறதென்று ஒரு கவிதைக் கூட எழுதலாம். ஆனால், 24/7 என்று மழை பெய்தால், வீட்டிற்குள்ளேயே அடைந்து, கன்னடத் தொலைக்காட்சிகளில் ஆரம்பித்து, உலகத் தொலைக்காட்சிகளில உலவி, தமிழ்ப் படங்களே சரணம் என விழுந்து, மின்சாரம் நின்றால், அறுவைப் புத்தகங்களில் தொலைந்து - சரியான ‘போர்'. என் முதல் வார மங்களூர் மேற்கண்ட நிகழ்வுகளால் மட்டுமே நிரம்பியிருந்தது. பின், இரண்டாவது வாரத்தில் இருந்து, சூரியன் கொஞ்சம் பயம் தெளிந்து வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பித்ததால், குடை மறைந்தாலும் நனையாமல் அலுவலகத்திலிருந்து அறைக்குத் திரும்ப முடிந்தது.

மழையில் நனைந்திருந்தாலும் மங்களூர் கேரளாவினைப் போல் வெகு அழகு. பெரிய நகரமில்லாவிட்டாலும், மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கே உரிய வசதிகள் நகரில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன (இவ்வருட ஜனவரியில் ‘ராம் சேனா'வினர் மங்களூர் பப் ஒன்றில் புகுந்து, பெண்களைத் தாக்கியது நினைவிருக்கலாம்). வணிக வளாகங்கள் நிறையத் தென்பட்டன. ஆட்டோவில் மீட்டர் போட்டு பணம் வாங்குகிறார்கள். தனியார் பேருந்துகள் சாலைகளில் பேயோட்டம் ஓடுகின்றன. கல்லூரி மாணவர்களும், பெண்களுமாக காலை சாலைகளில் இளைஞர் கூட்டம்தான்(மணிப்பால் பல்கலைக் கழகம், மங்களூருவிற்கு மிகப் பக்கம்). தமிழ்ப் படங்களின் சுவரொட்டிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் காண முடிந்தது (தமிழ்ப் படங்களைக் காண, கேரள ஊரான காசர்கோட்டிற்கு செல்வார்களாம் - அலுவலக நண்பர் சொன்னது). தெருவிற்கு மூன்று இடங்கிளாலவது ஒயின்ஷாப். பரவலாக இனிப்புக் கடைகள். பல இடங்களில் ரோட்டோர பானிபூரிக் கடைகள். நகரைச் சுற்றி அபார்ட்மெண்ட் காடுகள் நிறைய முளைத்துள்ளன. மொத்தத்தில் வளர்ந்து வரும் பெருநகரம் - மங்களூர்.

--

இன்னும் சில அனுபவங்கள் மீதி உள்ளன. அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

Wednesday, September 09, 2009

கடவுளர்களின் வீதியில்



Image credit: CVR

கடவுளர்களின் வீதியில்

*******

கர்ப்பக்கிரக கதவினில்
கார்ப்பரேஷனின்
பழைய எண்ணும்/புதிய எண்ணும்.

*******

விரைந்து மறைந்த
லான்சரின் புகையில்,
மெதுவாய் ஊர்ந்தது
விநாயகரின் எலிவாகனம்.


*******

காணாமல் போனார்,
கடவுள் சிலமணிகளுக்கு.
மின்தடை தொடருமென,
பேப்பரில் நாளைவரும்.

*******

பாலும் தேனும்
பணக்காரக் கடவுளுக்கே!
நமக்கு வாய்த்தது
கார்பனாபிஷேகம் மட்டுமே!
பரிதாபத்தில்
ரோட்டோரப் பிள்ளையார்.

******

"இறைவா! காவிரிப் பிரச்சினையை
தீர்த்து விடு"
வேண்டினான் பக்தன்!

"பக்தா! வெளியே இருக்கும்
கால்வாய் பிரச்சினையை தீர்த்து வை"
வேண்டினார் கடவுள்!

******

வாழைப்பந்தலிட்டு,
வரிசையாய் விளக்குகட்டி,
வரிவிதித்து வசூலித்து,
கூழூற்றி கூடிக்கலைந்தனர்,
பக்தர்கள்.
ஒருவருடம் இனி நிம்மதியென
குதூகலித்தார் கடவுள்!


******

Blog Widget by LinkWithin